ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்?

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பது யாா்?

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளா் அருட்தந்தை சிரில் காமினி தொிவித்தாா்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனந்த தேசப்பரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”சிலர் எம்மிடம் கேட்கிறார்கள், 5 வருடங்களாக எதற்காக இந்த ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை இழுத்துக் கொண்டு போகின்றீர்கள் என்று.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இந்த உண்மையை தெரிந்துக் கொண்டால், நாட்டில் கொலை கலாசாரத்தை ஆரம்பித்தது யார்? இந்தக் கொலைகளை சாதாரணமாக்கியது யார்?

அரசியல் அதிகாரத்திற்கு வர நாட்டு மக்களின் உயிர்களை பலியொடுத்த தரப்பினர் யார் என்பதை நாட்டு மக்களும் புரிந்துக் கொள்வார்கள்.

எந்த அரசியல் சக்தி இதன் பின்னால் உள்ளது? எந்த எந்த அரசியல் அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்பதை நாம் தேட வேண்டும்.

நாம் இவர்களை அடையாளப்படுத்தியவுடன், இவர்களிடமிருந்து இந்த சமூகத்தை பிரிக்க வேண்டும். அல்லது இந்த சமூகத்திலிருந்து இவர்களை வேறு படுத்த வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சனல் 4 ஊடகத்தில் வெளியான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார்.

இந்தக் குழுவின் அறிக்கையும் அவரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், தற்போது குறித்த அறிக்கை காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மிகவும் உறுதியான சாட்சிகள் மற்றும் தரவுகள் காணப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷவோ, ரணில் விக்கிரமசிங்கவோ இது தொடர்பாக ஆணைக்குழுக்களை அமைத்தாலும், அடுத்தக்கட்ட நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை.

ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஒன்று இவர்கள் இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது, தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் இவர்களது நெருங்கிய தரப்பினராக இருக்க வேண்டும். அப்படியானால்மட்டும்தான் இந்த விடயங்களை இவர்கள் மூடிமறைத்திருக்க வேண்டும்” என அருட்தந்தை சிரில் காமினி மேலும் தொிவித்தாா்.

Recommended For You

About the Author: admin