உள்ளூர் வங்கி வாடிக்கையாளருக்கும் சவாலான வெளிநாட்டு மோசடிக்காரர்கள்!

இலங்கை வரும் உக்ரைன், நைஜீரிய, பல்கேரிய மற்றும் இந்திய பிரஜைகள் இணையத்தின் ஊடாக அதிநவீனமான முறையில் பாரியளவிலான பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக இது மாறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (30) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் சமூக ஊடகங்கள் ஊடாக தம்மை ஒழுங்கமைத்து இணையதள உள்நுழைவுகள் ஊடாக சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் அறிக்கை சமர்ப்பித்ததுடன், இந்தச் சந்தேக நபர்கள் இழைத்த குற்றச்செயல் இலங்கையிலுள்ள வங்கி முறைமையையும் கணக்கு வைத்திருப்பவர்களையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.
கடவத்தை கணேமுல்லயைச் சேர்ந்த அயோசா காஞ்சனி போதேஜு என்பவரின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு 18,10,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
தனியார் வங்கி ஒன்றின் 35 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து முறைப்பாட்டாளர் தனது வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை வழங்கியதையடுத்து இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில், உக்ரைனைச் சேர்ந்த Liubomyr shvets மற்றும் Nikita arhunov ஆகிய இரு சந்தேக நபர்களும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இணையம் ஊடாக பண மோசடிகளை மேற்கொள்ள அவர்களுக்கு உதவிய இந்த நாட்டிலுள்ள சகல நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin