மன்னாரின் எதிர்காலம்’: வாழ ஒரு சதுர அடி நிலம் கூட இனி இல்லை

மனித வாழ்க்கைக்கு இயற்கை மிக அவசியம். ஒரு நாட்டில் முப்பது வீதத்திற்கு மேல் காடாக இருக்க வேண்டும் என்பதே நியதி.

மனிதனின் சுகதேகி வாழ்விற்கும், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இருப்புக்கும் காடுகள் அவசியமானவை.

அத்துடன் கரியமிலவாயுவை உட்கொள்வதற்கும், மழை வீழ்ச்சிக்கு காரணமாவதுடன் மண்ணரிப்பையும், வெள்ளப்பெருக்கையும் காடுகளே தடுக்கின்றன.

இதில் ஆற்றல் சுற்றோட்டம், உணவு வட்டம், இயற்பியல், மற்றும் வேதியியல் சார்ந்த செயல்பாடுகளும் உள்ளடங்கும்.

சதுப்பு நிலக்காடுகள், பசுமை மரக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசி இலை காடுகள் எனப் பலவகை உண்டு. நிலவியல் மற்றும் வனவியல் இருப்புக்கு உட்பட்டவனே மனிதனும்.

உயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணுயிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண்வளம், மேகங்கள், மழைத்துளி இவை இயற்கையின் கொடையே!

இதில் தூய இயற்கைவாதம், தத்துவ இயற்கை வாதம், இயற்கைக்கு எதிரானது என மூன்று நிலைகளாக வகுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது கடப்பாடாகும். ஆனால் அதை மன்னாரில் மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த முனைவது வேடிக்கையாகும்.

மன்னார் மாவட்டம் 2002.05 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டது. ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும், வடக்கிலே அதிக கனிய வளத்தையும் கொண்ட மாவட்டமாகும்.

ஏழு ஆறுகள், கட்டுக்கரைக்குளம் உட்பட மூன்று மத்திய நீர்ப்பாசன குளங்களும், ஏழு மாகாண நீர்ப்பாசன குளங்களும் 448 கமநலசேவைத் திணைக்களத்துக்கு உட்பட்ட குளங்களும், 186 ஊட்டல் குளங்களும் காணப்படுகின்றன.

இலங்கையிலே அதிக நெல் விளைச்சலிலே இரண்டாவது மாவட்டமாகும். மிக அழகிய கடல் வளமும் தன்னகத்தே கொண்டது.

ஒரு காலத்தில் முத்து குளிப்பதற்கு பெயர் பெற்ற இடமாகவும் விளங்கியது. இலங்கையிலே கருவாட்டு உற்பத்தியிலும் சிறந்து விளங்கியது. பனை வளமும் அதிகம் காணப்படுகிறது.

அத்துடன் ஒல்லாந்தர் கோட்டை, அல்லிராணி கோட்டை, தென்னாசியாவில் ஆகப்பெரிய சுற்றளவு உள்ள பெருக்க மரம், வெளிச்ச வீடு, தொங்கு பாலம், நாற்பது அடி கல்லறை, திருக்கேதீஸ்வரத்திருத்தலம், மடுத்தேவாலயம் போன்ற சுற்றுலா தளங்களும் காணப்படுகின்றன.

இந்திய போக்குவரவுக்கும் மிகக் கிட்டிய தூரத்தில் உள்ள மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம், மீன்பிடி.

ஆனால் தற்பொழுது இரண்டும் சவாலுக்குட்பட்ட நிலையில் உள்ளன. யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் தமது திணைக்களங்கள் ஊடாக மன்னாரைத் தனது பிடிக்குள் அகப்படுத்தி விட்டது.

எதிர்காலத்தில் மனிதன் குடியேற முடியாத அளவில் சட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு அங்குல நிலம் கூட அரச பயன்பாட்டு நிலமாக இல்லை.

வனத்திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களமும் எந்த விதமான கட்டுப்பாடுமின்றி, மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனையுமின்றி, எந்த வித ஒழுங்குமுறைமையும் பின்பற்றப்படாமல் நிலப்பரப்புகளைத் தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தி அரச வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளன.

அவற்றில் கூட தெளிவான வரைபடமோ எல்லைகளோ கோடி காட்டப்படவில்லை. இடப்பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்வதற்கு முன்னர் அந்த நிலங்களை அரசத்திணைக்களங்கள் தமக்குச் சாதகமாக மாற்றி விட்டன.

இது ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாகும். மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற வேண்டிய நான்காயிரம் குடும்பங்களுக்கு மேல் இந்தியாவில் வசிக்கின்றனர்.

இவர்கள் வரும்போது எங்கே குடியேற்றுவது? மன்னார் மக்கள் எதிர்காலத்தில் பிள்ளைகள் பெறுவதை நிறுத்த வேண்டும். அல்லது வேறு மாவட்டத்திற்கு குடிபெயர வேண்டும்.

இந்த நெருக்கடிகளுக்குள்ளே காற்றாலை மின் உற்பத்திக்கு காணி சுவீகரிப்பு, கனிய மண் அகழ்வுக்கு காணி சுவீகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் இடைவிடாத தொல்லைகள் என மக்களை மேலும் மேலும் அச்சுறுத்தலுக்கும், வாழ்வாதார இழப்புக்கும், வாழ்வியல் அசௌகரியத்துக்கும் உள்ளாக்குவது பெரும் தவறாகும்.

தமது மாவட்டத்திலேயே, தனது மண்ணிலேயே, தாம் எந்தவித உரித்தும் இல்லாதவர்களாக, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் போன்ற அச்சவுணர்வோடு வாழுகின்ற மனோநிலையை மன்னார் மக்களுக்கு அரசாங்கம் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கிறது.

இயற்கையும், கடல் வளமும் அவசியம். அதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் மனிதன் உயிர் வாழ முடியாத போது இயற்கை மட்டும் இருந்து எதற்கு பயன்பட போகிறது எனும் கேள்வி எழுகிறது.

அரசு சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்துகிறதே தவிர. மனிதாபிமானத்தையோ, மனித வாழ்வியலின் இருப்பையோ ஒருபோதும் கவனிப்பதில்லை.

மன்னார் மாவட்டம் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 600 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்டதாகும்.

இதில் கடல், தரை உட்பட வனத் திணைக்களம், வன விலங்குகள் திணைக்களம் சேர்ந்து 2,21,220 ஹெக்டேயர் நிலத்தை வர்த்தமானி மூலம் காலத்துக்கு காலம் பிரகடனப்படுத்தி கையகப்படுத்தியுள்ளன.

அதில் வனத்திணைக்களத்தினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட விவரம்:-

நிந்தாவில் 2,0287.66 ஹெக்டேயர், முள்ளிக்குளம் 5,283.77 ஹெக்டேயர், பாலம்பிட்டி 3,498.89 ஹெக்டேயர், மடு 18,026.77 ஹெக்டேயர், மாவில்லு 40,030.62 ஹெக்டேயர், மடு 26,749.32 ஹெக்டேயர், பலகமுனை 300.2 ஹெக்டேயர், அச்சங்குளம் கண்டல் காடு 1,405.8 ஹெக்டேயர், விடத்தீவு கண்டல் காடு 501.92 ஹெக்டேயர், எருக்கலம்பிட்டி கண்டல் காடு 116.2.8 ஹெக்டேயர், மூன்றாம் பிட்டி கண்டல் காடு 517.4.2 ஹெக்டேயர், திருக்கேதீஸ்வரம் கண்டல் காடு 328.01 ஹெக்டேயர்.

வனவிலங்குகள் தினணக்களத்தினால் வர்த்தமானி மூலம் அத்தாட்சி படுத்தப்பட்ட நிலங்களின் விவரம்:-

மடு தேசிய பூங்கா 63,067 ஹெக்டேயர், ஆதாம் பாலம் கடல் தேசிய பூங்கா 18,990 ஹெக்டேயர், வங்காலை பறவைகள் சரணாலயம் 4,838.9 ஹெக்டேயர், கட்டுக்கரைக்குளம் பறவைகள் சரணாலயம் 3941.2.3 ஹெக்டேயர், விடத்தில்தீவு இயற்கை காப்பகம் 2,90,280 ஹெக்டேயர், இதில் 05.06.2024 வர்த்தமானியின் பிரகாரம் 160 ஹெக்டேயர், விடுவிக்கப்பட்டாலும் அதன் வர்த்தமானி பிரசுரத்தில் விவரம் தெளிவாக இல்லை.

முழுமையாக விடுவிக்கப்பட்டதா அல்லது 160 ஹெக்டேயர் மட்டும் விடுவிக்கப்பட்டதா என்பது எவருக்கும் புரியவில்லை.
வில்பத்து மிருகங்கள் வசிப்பிடம் 617 ஹெக்டேயர்.

இதில் பலகமுனை, விடத்தில்தீவு, எருக்கலம்பிட்டி, மூன்றாம்பிட்டி, திருக்கேதீஸ்வரம், மடுத்தேசியப்பூங்கா ஆகியன வனத்திணைக்களமும், வன விலங்குகள் திணைக்களமும் இணைந்து வர்த்தமானி வெளியிட்டுள்ளன.

மொத்தம் 64,880.83 ஹெக்டேயர். இதில் காணி விடுவிப்பிற்காக மன்னர் மாவட்ட செயலகத்தால் வனத் திணைக்களத்திடம் 13,020.1 ஹெக்டேயர் கோரப்பட்டுள்ளது.

ஆனால் விடுவிக்கப்பட்டது ஆக 1,513.3.1 ஹெக்டேயர். இவை ஏலவே பயன்பாட்டில் உள்ள நிலமாகும். புதிய காணி எதுவும் விடுவிக்கப்படவில்லை. இதே வேளை 12,801.72 ஹெக்டையரை புதிதாக காடு வளர்ப்பதற்காக வனத்திணைக்களம் கோருகிறது.

அத்துடன் 1,218.44 ஹெக்டேயரை கிராமத்திற்கான காடு வளர்ப்பிற்கும் கோரியுள்ளது. வடிவேலுவின் ‘கிணத்தை காணவில்லை’ என்பது போல் மன்னாரில் ‘காணியை காணவில்லை’ என தேடும் நிலையையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டி நிற்கின்றன.

மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலம், ஏறக்குறைய 20 வீதம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விவரங்களின் படி மாவட்டத்தில் இனி ஒரு சதுர அடி நிலம் கூட மக்கள் குடியமர்வதற்கு இல்லை.

இருக்கும் நிலத்தில் மாடி வீடுகள் அமைப்பதைத் தவிர வேறு வழியுமில்லை. எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலை மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கப் போகிறார்கள்.

கடல் பகுதிகளும் கூட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் கடலில் மீன் பிடிப்பதற்கும் தடை விதித்தாலும் ஆச்சரியத்துக்கு இடமில்லை.

இந்த ஆண்டு நாட்டில் உணவு உற்பத்தி வெறும் 54வீதமே.

இவ்வாறு அரசாங்கம் மக்களுக்கு நில ரீதியாக நெருக்கடி கொடுத்தால் நாட்டில் எப்படி விவசாய செய்கை மேம்படுத்தப்பட்டு உணவு உற்பத்தி அதிகரிக்கும்? வறுமை தாண்டவம் ஆடுவதை தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே இதனால் மன்னாரின் அபிவிருத்தி முழுமையாக தடைப்படுகின்றது. 83 குளங்கள் வனத்திணைக்களத்தாலும், 26 குளங்கள் வனவிலங்குகள் திணைக்களத்தாலும், 33 குளங்கள் இரண்டு திணைக்களங்களாலும் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்குள் எந்த விதமான அபிவிருத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. அதனால் அக்குளங்களின் கீழ் உள்ள விவசாயம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.

மன்னார் மக்களுக்கான இயற்கை வள குடிதண்ணீருக்காக அடையாளப்படுத்தப்பட்ட கல்லாறு குடிதண்ணீர்த் திட்டம், பள்ளி முனை கடல் ஆழப்படுத்துதல், இலவங்குளம் பாதை திறப்பு, மேய்ச்சல் தரவை ஒதுக்கீடு, நீதிமன்ற வளாகம் இடமாற்றம், கூராய் வெள்ளாங்குளம் வீதி புனரமைப்பு, பரப்புக்கடந்தான் பெரியமடு வீதி புனரமைப்பு போன்றவை எல்லாம் இந்த அரச திணைக்களங்களின் தம்மிஷ்டப்படியான காணி ஆக்கிரமிப்பினால் தடைப்பட்டுப் போயுள்ளன.

இது மட்டுமன்றி கால்நடைக்கு மேய்ச்சல் நிலம் இன்மையால் கால்நடைகளைப் பண்ணையாளர்கள் விற்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் எதிர்காலத்தில் எந்த அபிவிருத்தியும் செய்வதற்கு உரிய நிலச் சூழல் அமைப்பு இல்லை. இந்த விடயத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொண்டவர்களாகத் தெரியவில்லை.

சாமானிய மக்களுக்கு இதனால் ஏற்படுகின்ற விளைவுகள், சவால்கள் குறித்தும் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற தாக்கங்கள் பற்றியும் எந்த விதமான புரிதலும் இல்லை.

ஆகவே மன்னார் மண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியே! அறிவற்ற உணர்ச்சி அரசியல் எதைச் சாதித்தது?

மன்னார் மக்கள் மூன்று தசாப்தத்திற்கும் மேலாக அறிவுபூர்வமாக பிரதிபலிக்கும் அரசியல் தெரிவுகளை மேற்கொள்ளாமல் மதவாத சகதிக்குள் சிக்குண்டு உணர்வடிமைகளாக இருப்பதனால் மன்னாரின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது? எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. இந்த மாவட்டத்தை காப்பாற்ற போவது யார்…?

Recommended For You

About the Author: admin