கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் படுகாயம் அடைந்த கடற்றொழிலாளர்

கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த பூநகரி கடற்றொழிலாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராசரத்தினம் நிமால் எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தொியவருகையில்,

குறித்த நபரின் படகினை, அவரது நண்பர்கள் கடலுக்கு எடுத்து சென்றிருந்த நிலையில், மாலை ஆகியும் கரை திரும்பாத நிலையில் குறித்த நபர் கடற் கரைக்கு சென்று அவதானித்துள்ளார்.

6 மணியளவில் கரைக்கு திரும்பிய படகு, கடற்படை முகாமிற்கு முன்பாக கரை ஏற்றப்பட்டது. இந்த நிலையில், படகினை செலுத்தியவர்கள், கடற்படை முகாமிற்கு பதிவிற்காக சென்றபோது தமது படகில் ஏற்றி வந்த மண்ணெண்ணையை பதிவு மேற்கொள்ளும் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் மண்ணெண்ணை கொள்கலனை அகற்றமாறு அவர்களிடம் கடற்டை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அவர்களை அதனை அகற்றியுள்ளனர்.

கருத்து முரண்பாடு

இதனையடுத்து இரு தரப்பனருக்கும் இடையில் கருத்து முரண்பாட்டையடுத்து , கடற்படை அதிகாரி ஒருவர் அவர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியை சூட்டுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ததாகவும், அதனை ஒளிப்பதிவு செய்ய முற்பட்டபோது தொலைபேசியை பறித்து, தம்மை தாக்கிதாகவும் தெரிவிக்கின்றார்.

அதோடு தன்னையும், தன்னுடன் நின்றவர்களையும் கடற்படையினர் துரத்தி துரத்தி தாக்கியதாகவும், இதன்போது தான் படுகாயமடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

சுயநினைவிழந்த நபர்

படுகாயங்களிற்குள்ளான நபர் சுயநினைவிழந்து கிடப்பதை அவதானித்த கிராமத்தவர்கள், அவரை வேரவில் வைத்தியசாலையில் அனுமதித்ததை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேசமயம் கடற்படையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் ஒரு பல் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பல், விழும் அபாய நிலையில் உள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த நபருக்கு சொந்தமான இரண்டு கையடக்க தொலைபேசிகளும், கடற்படையினரால் எடுத்த செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor