கடும் எதிர்ப்பு: வாக்கெடுப்பின் ஊடாக விவாதத்தை நடத்தும் அரசாங்கம்

பாராளுமன்றத்தில் இன்று 23ஆம் திகதியும் நாளை 24ஆம் திகதியும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (online safety bill) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறுகிறது.

அரசாங்கம் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இலங்கையில் செயல்படும் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

இந்நிலையில், விவாதத்தை நடத்தக்கூடாதென எதிர்க்கட்சிகள் விவாதத்தை நடத்துவதா? இல்லையா? என வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தன. அதன் பிரகாரம் சபாநாயகரால் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் விவாதத்தை தொடர்ந்து நடத்த ஆளுங்கட்சி ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் எதிராக வாக்களித்தன.

விவாதத்தை நடத்த ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிராக வாக்களின.

இதுகுறித்து இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

”இந்தச்சட்டம் மீதான விவாதம் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு முரணாக இருப்பதால் இந்த விவாதத்தை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும்.

சட்டமூலத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் அமைய மீள் வரைவு செய்ய வேண்டும.“ என கோரிக்கை விடுத்தார்.

”பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் விவாதிக்கப்பட்ட விடயங்களுக்கும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்தச் சட்டமூலம் தொடர்பில் ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்ட பின்னரே நிறைவேற்றப்பட வேண்டும்.” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில், ”கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் எழுச்சிகள் இடம்பெற்ற போது, சமூக ஊடகங்களில் பரந்தப்பட்ட அளவில் கருத்துகள் பகிரப்பட்டன.

இதனால், அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. சமூக ஊடகங்களை ஒடுக்கும் தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. அதன் காரணமாகவே நிகழ்நிலை காப்பு சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற முற்படுகிறது.

பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்க சட்டம் அல்ல இது. அதேபோன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சட்டமூம் இல்லை. சட்டதில் உள்ள 56 சரத்துகளில் 34 சரத்துகள் அரசியலமைப்ர்புக்கு முரணாக உள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ள பின்புலத்திலேயே இதனை நிறைவேற்ற பார்க்கின்றனர். ” என்றார்.

Recommended For You

About the Author: admin