மட்டக்களப்பின் இ.போ.ச பஸ் சேவை முற்றாக பாதிப்பு

இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின் சாரதி ஒருவர் தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர்களினால் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

இந்த நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் மட்டக்களப்பு, இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இன்றைய தினமும் இவர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய டிப்போ ஊழியர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதன் காரணமாகவே தமது பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் தொடருவதாகவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் தாங்கள் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல்தாரிகள் கைது செய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.

குறித்த போராட்டம் காரணமாக மட்டக்களப்பின் இலங்கை போக்குவரத்துசபை பஸ்களின் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதனால், பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin