திருமணம் செய்யாமல் பெண் ஒருவருடன் வாழ்ந்து வந்த நபர் சடலமாக மீட்பு!

புத்தளம் மாவட்டம் வன்னாத்தவில்லு – எட்டாம் கட்டை கரடிபூவல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (01-12-2023) மாலை வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது

இச் சம்பவத்தின் போது, வன்னாத்தவில்லு, எட்டாம் கட்டை கரடிப்பூவல் பகுதியைச் சேர்ந்த 57 வயதான ரணசிங்க ஆராச்சிலாகே சுனில் பிரேம எனும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட நபர், திருமணம் முடிக்காமல் வயோதிப பெண் ஒருவருடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், சில நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையிலேயே இவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உருக்குலைந்து, அழுகிய நிலையில் சடலமொன்று கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வன்னாத்தவில்லு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

குறித்த நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் எனவும், சடலம் அடையாளம் காண முடியாத வகையில் அழுகிய நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சடலத்தின் கை மற்றும் கால் பகுதிகள் உட்பட சில உடல் அவயங்கள் சில பகுதிகள் சிதைவடைந்திருப்பதாகவும், அதனை மிருகங்கள் சாப்பிட்டிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

Recommended For You

About the Author: webeditor