போலி மணல் அனுமதிப்பத்திரம் பயன்படுத்திய இருவர் கைது!

போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் பெறவேண்டியது கட்டாயம். இந்த அனுமதிப் பத்திரங்கள் கனியவளத் திணைக்களத்தால் வழங்கப்படும்.

அந்த அனுமதிப் பத்திரங்களையே போலியான முறையில் தயாரித்து இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு மணல் அனுமதிப் பத்திரம் தொடர்பாக மேற்கொள்ள விசாரணைகளில் அந்தப் பத்திரம் போலியானது என்று கண்டறியப்பட்டிருந்தது.

விசேட குற்ற விசாரணை
அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

விசாரணையின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் விசுவமடுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான அனுமதிப் பத்திரம் என்று தெரிந்தும் அதை ஒருவருக்கு வழங்கியமை, போலியான அனுமதிப் பத்திரம் என்று தெரிந்தும் அதைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான அனுமதிப் பத்திரம் ஒன்றுப்பாக சுமார் 15 ஆயிரம் ரூபா வரையில் அறவிடப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: webeditor