வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்!

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

போராட்டம் நிச்சயம் தொடரும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மயிலத்தமடுவில் தமிழ் மக்களின் மேய்ச்சல் தரையில் சிங்கள குடியேற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. இதுபோலவே வடக்கு – கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 70 வருடங்களாக தமிழ் மக்கள் இனத்தின் விடுதலைக்காக மட்டுமல்ல, நிலமானது பௌத்த சிங்கள மயமாக்கல் ஆக்கப்படுவதற்கு எதிராகவும் போராடி வந்திருக்கின்றனர்.

எனவே, எமது நிலத்தை விடுவிப்பதற்கும் அதனை ஆக்கிரமிப்பதற்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எமது கட்சியின் மாநாட்டிலும் நாங்கள் இனவிடுதலைக்காகவும், நில விடுதலைக்காகவும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து, அதன் பின்னர் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அரசுக்கெதிரான இந்தப் போராட்டங்கள் நிச்சயம் தொடரும் என்பதை நான் திட்டவட்டமாக தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: webeditor