உயரமான மலையில் இருந்து பூனையை வீசிய பிரித்தானிய இளைஞர்

உயரமான மலை உச்சியில் இருந்து பூனைக்குட்டி ஒன்றை கீழே வீசிய பிரித்தானிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் கார்ன்போர்த் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்குவாரியின் மலை உச்சியில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை கீழே தண்ணீரில் வீசிய காணொளி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விலங்கு மீது நடத்தப்பட்ட கொடுமையான செயலை தொடர்ந்து லங்காஷயர் பொலிஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

சமூக ஊடக பயனர்களால் இந்த இளைஞரின் செயல் பொலிஸாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து லங்காஷயர் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பொதுவாக பிரித்தானியாவில் இத்தகைய விலங்கு கொடுமை செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தற்போது இணையத்தில் வெளியான காணொளி காட்சிகளின் உண்மை தன்மை தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை, விலங்கு கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையையும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விலங்கு துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடக பயனர் ஒருவர், விலங்கு கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு “நோய்” என கடுமையாக சாடியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor