தமிழர் பகுதிகளில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் அதிகரிப்பு!

வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரவுடிகள் வர்த்தகரை தாக்கியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள்ளேயே நேற்று மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மூவர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று சிறுநீர் கழித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வர்த்தக நிலைய வர்த்தகரால், இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காது அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரவுடி கும்பலினால் வர்த்தகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினர் உட்பட பலரும் வேடிக்கை பார்த்த போதிலும் எவரும் தடுப்பதற்கு முற்படாத நிலையில் இத்தாக்குதலினால் படுகாயமடைந்த வர்த்தகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஏனைய இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: webeditor