கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரத ஆரம்பம்!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரத சேவை இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் உள்ள பல சுற்றுலா இடங்களை உள்ளடக்கிய பாதையில் பயணிக்கும் இந்த புகையிரதத்தை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை புகையிரத திணைக்களம் பூர்த்தி செய்துள்ளது.

“எல்ல ஒடிஸி” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு பதுளை நிலையத்தை சென்றடையும்.

கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, அப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படும்.

இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.20 மணிக்கு கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையும்.

மேலும், வழியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் ரயில் நின்று செல்லும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor