பலரையும் சோகத்தில் ஆழ்த்திய 19 வயது மாணவியின் மரணம்

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.

குருநாகல் பகுதியில் மகளிர் கல்லூரியில் உயர்தரம் கல்வி பயின்ற 19 வயதுடைய மாணவியொருவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது உறவினர்களின் அனுமதியுடன் மூளைச்சாவடைந்த மாணவியின் இதயம் மற்றும் நுரையீரல்கள் என்பன இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மருந்துவ நிபுணருக்கு இவ்விரு உறுப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சாதனை
இலங்கையில் இதற்கு முன்னர் தனித்தனியாக உறுப்புகள் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியிடமிருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் டாக்டர் சந்தன கஞ்சங்கமுவ தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லீரல் மற்றும் கண் சவ்வுகள் என்பன மூன்று பேருக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், , விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 5 உறுப்புகள் மூலம் ஏழு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அம்பன்பொலவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய பிள்ளையான விஹகனாக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். சகோதரி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் விஹாகன பொதுப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், ஆங்கில மொழியில் உயர்தர வர்த்தகப் பாடத்தில் கல்வி கற்க குருநாகல் பிரபல பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம்
அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையில் அவர் தோற்றியுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த 17ஆம் திகதி கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமானமையினால், அன்றைய தினம் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​ஆபத்தான நிலையில் இருந்த அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுயநினைவின்றி உயிரிழந்துள்ளார்.

மூளை புற்று நோய் காரணமாக மூளைச் சாவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. வெளியில் எந்த அறிகுறியும் காட்டாமல் தொடங்கிய புற்று நோயால் அவரது மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க விஹகனாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: webeditor