வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

தடைசெய்யப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது வர்த்தக அளவுகளில் உள்ள பொருட்களை விமான நிலையத்தினூடாகவோ அல்லது உடன் வராத பயணிகளின் பொருட்களையோ தம்முடன் பயணிகள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் இன்று அனைத்து பயணிகளுக்கும் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக நாட்டுக்குள் நுழையும் பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சி.நோனிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்து, அலங்கார செடிகள் போன்ற பொருட்களும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினைகளால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பொருட்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது சில பயணிகள் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி வணிக அளவுகளில் பொருட்களை கொண்டு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது தற்காலிக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது ஏனைய பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு சுங்கத்துறை அனைத்து பயணிகளுக்கும் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால், கொண்டு வரப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்வதுடன், சுங்கச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் விதிகளின்படி மேலும் பறிமுதல் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor