கடன் மறுசீரமைப்பு வேலைத்திடம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்!

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எக்கனமிக் அவுட்லக் 2023 என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா
இலங்கை தனது அனைத்து கடன் மீள்கொடுப்பனவையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளது அடுத்த ஆறுமாதங்களிற்குள் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நெருக்கடியை எதிர்நோக்கும் அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) சர்வதேச நாணய நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கைக்கு இருதரப்பு கடன் வசதியை வழங்குவதன் மூலம் இந்தியா தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்தியா இதனை அறிவித்ததுடன், இந்தியாவும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியது.

இவ்வாறான கடன் உத்தரவாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஏனைய கடனாளிகளுடன் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஜப்பான்
அத்துடன் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து விரைவில் உத்தரவாதம் கிடைக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கடன் மறுசீரமைப்பிற்கான காலஅட்டவணையே முக்கிய பிரச்சினையாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடன்பேண்தகுதன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இலங்கை பேண்தகு வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிஸ் கழக நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor