உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலக்கு வைக்கப்படும் தமிழ் மக்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுவதானது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாயமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இவ்வாறான கூட்டுச் சேர்க்கை என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. கூட்டுச் சேர்க்கை எதிர்காலத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போன்றவைகளிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனென்று சொன்னால் அரசியல் வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்களின் மிகப்பெரிய ஆதரவில் வந்து, விரைவிலேயே ஆதரவை இழந்துள்ள பொதுஜன பெரமுன கட்சிக்கும் இந்த கூட்டுச் சேர்க்கை அவசியமானதொன்று.

தந்திரோபாய நடவடிக்கை

ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளும் தங்களுடைய பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு தந்திரோபாயமான கூட்டுச்சேர்க்கைக்கு சென்றிருக்கின்றன.

தமிழ் மக்கள் வடக்கு – கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் கணிசமான அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளில் வந்து செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக தமிழ் மக்களுடைய வாக்குகளும் உள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்த தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தீர்வுக்கு பங்களிப்புச் செய்யுமா என்று பார்க்கின்ற பொழுது, தமிழ் மக்களினுடைய வாக்குகளைப் பெறுவதற்கு தந்திரோபாயமாக சிற்சில முயற்சிகளை எடுப்பது போல காட்டிக்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor