அரச ஊழியர்களின் கொடுப்பனவை குறைக்க தயாராகும் அரசு!

அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரசாங்க செலவினங்களை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் சிக்கனத் திட்டத்தின் கீழ் முழுமையாக குறைக்கப்படாது, ஆனால் சில வரம்புகளுக்கு உட்பட்டதாக மாற்றப்படும் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, குறைக்கப்பட வேண்டிய மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பில் கலந்துரையாடி எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக நேரம், விடுமுறை நாட்கள், வாழ்க்கைச் செலவுகள் போன்ற கொடுப்பனவுகள் தவிர, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக மட்டும் மாதத்திற்கு சுமார் 9300 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

ஏறக்குறைய 15 லட்சம் பேரை உள்ளடக்கிய அரச சேவையில் பெரும்பான்மையானவர்கள் தமது கடமைகளை குறித்த நேரத்திற்குச் செய்யாமல் கடமை நேரத்திற்குப் பின்னரும் மேலதிக நேரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தமது கடமை நேரத்தின் பின்னர் தமது கடமைகளை நிறைவேற்றுவோரின் எண்ணிக்கை சுமார் 600,000 எனவும் அது 40 வீதமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயல்முறை பொது சேவைக்கு தேவையற்ற செலவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor