15 வயது சிறுமியை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்ய முயன்ற இருவர் கைது!

கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சித்த இளைஞரையும் அவரது மாமாவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த திருமணத்திற்கு மாமா எனப்படும் நபர் அறிவுரை கூறியதுடன் சிறுமியை மறைத்து வைக்க அடைக்கலமும் அளித்துள்ளார்.

குறித்த சிறுமியை தம்புள்ளை நிகவடவன பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நிகவடவன பிரதேச முஸ்லிம்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த 02 மாதங்களுக்கு முன்னர் இந்த பாடசாலை மாணவி தனது பாட்டியின் பராமரிப்பிற்காக தம்புள்ளை வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளையில் இந்த இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

திருமண வைபவத்திற்கு முன்னதாக சிறுமியின் தாய், தந்தை மற்றும் இளைஞனின் உறவினர்கள் பலர் ஒன்று கூடி, சிறுமி மதம் மாறிய மகிழ்ச்சியை கொண்டாட நிகவடவன பகுதியில் உள்ள வீடொன்றில் விருந்து வைத்துள்ளனர்.

அப்போது குறித்த இளைஞருடன் வீட்டில் தனியாக இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறுமியிடம் மேலும் விசாரணை நடத்தியதில், குறித்த 15 வயதுடைய சிறுமி, இதற்கு முன்னரும் கலேவெல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மற்றும் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த திருமணம் பெற்றோருக்கு தெரிந்தே நடந்ததாகவும் குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor