கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்

கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது.

திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தாள். அப்போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள்.

அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள். கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளினால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை தவறாமல் பன்னிரண்டு வருடம் கடைப்பிடித்து நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார்.

கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை தீபம் ஜோதி பரப்பிரம்ஹம்! தீபம் சர்வ தமோபஹம்!

தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே! என்ற சுலோகத்தை சொல்வது மிகவும் விசேஷமான பலனை தரும். திருக்கார்த்திகை தினத்தில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

கார்த்திகை திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப்பாகும், தேங்காய் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்ச் துருவல் கொடைத் தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன.

ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

Recommended For You

About the Author: webeditor