யாழ் வல்லைப் பகுதியில் நீரில் மூழ்கி மாயமான இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்படையினரால் இன்று (23.11.2022) காலை குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று (22.11.2022) மாலை முதல் அவரைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தது.

குறித்த இளைஞன் புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இளைஞரைத் தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தப்பி சென்ற இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor