அடுத்து என்ன? உலக முடிவா? முடிவுக்கு வந்தது அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தம்!
அமெரிக்க, ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையே அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் இருந்த கடைசி சட்டபூர்வ ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’ (New START) இன்றுடன் காலாவதியானது.
இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக இரு நாடுகளின் அணு ஆயுதக் குவிப்பைக் கட்டுப்படுத்த எந்தவொரு சர்வதேச விதிகளும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
📍 2010-ல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என வரம்பு விதித்திருந்தது. மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் குண்டுவீசும் விமானங்களின் எண்ணிக்கையையும் இது கட்டுப்படுத்தியது.
🔍 2021-ல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், சட்டப்படி மீண்டும் நீட்டிக்கப்பட முடியாது. புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க இரு நாடுகளும் தவறிவிட்டன. ரஷ்ய ஜனாதிபதி புட்டின், ஒப்பந்தம் முடிந்த பின்னரும் ஓராண்டுக்கு இந்த கட்டுப்பாடுகளைத் தானாக முன்வந்து கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்கத் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ பதில் இன்னும் வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “பழைய ஒப்பந்தம் காலாவதியானால் பரவாயில்லை, சீனாவையும் உள்ளடக்கிய இன்னும் சிறந்த ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
⚠️ உலகின் 90% அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு நாடுகளுக்கு இடையே எந்தக் கட்டுப்பாடும் இல்லாதது, மீண்டும் ஒரு ‘அணு ஆயுதப் போட்டி’ (Nuclear Arms Race) உருவாக வழிவகுக்கும் என ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் பெயர்: New START (Strategic Arms Reduction Treaty).
கையெழுத்தான ஆண்டு: 2010 (ஒபாமா – மெத்வதேவ்).
அதிகாரப்பூர்வ முடிவு: பெப்ரவரி 5, 2026.

