வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பகிடிவதைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில்!
குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர், குளியாப்பிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதுருசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பகிடிவதையின்போது இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டிய பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த மாணவர்கள் ஹெட்டிபொல, கட்டுபெத்த, மரக்காவில மற்றும் உக்குவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தற்போது வயாம்ப பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேக நபர்களை உறுதிப்படுத்துவதற்காக ஆரம்ப அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

