பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் உணவுப்பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணாது இயங்கிய ஆறு உணவு கையாளும் நிலையங்களுக்கெதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பூநகரி மேற்பார்வை பொதுசுகாதர பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்டின் வழிகாட்டலில் பிரிவுகளுக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து அண்மையில் பூநகரி மற்றும் முழங்காவில் பகுதியில் உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற விதத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டதோடு உணவுப் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் செயற்பாடுகளும் இனங்காணப்பட்டன.
இதில் ஆறு உணவுகையாளும் நிறுவனங்களுக்கு எதிராக 27/08 புதன்கிழமை இருபத்தைந்து குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன.
இவை நீதிமன்றால் குற்றமாக உறுதிப்படுத்தப்பட்டமையையடுத்து ஒருஇலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் தண்டப் பணமும் அறவிடப்பட்டது.

