பொரலஸ்கமுவவில் இன்று அதிகாலை (24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் அப்பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, உயிரிழந்த இளைஞன் உட்பட ஒன்பது பேர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் வந்த துப்பாக்கிதாரி, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான மவுண்ட் லாவினியாவைச் சேர்ந்த ஹிகான் துலன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

