தேர்தல் பிரச்சாரத்திற்காக, தற்போதைய அரசாங்கம் அரச வளங்களை மறைமுகமாக பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (11.07) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி பொலிஸாருக்காக செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த செயலமர்வில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள், பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சமூக பொலிஸ் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் பிரதான பேச்சாளராக ஜனாதிபதி பங்கேற்பது உண்மையில் அரச வளங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அரச அச்சகத் திணைக்களத்தின் ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் நிறுவனமான அரச அச்சகத்தை இடமாற்றம் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும், திணைக்கள ஊழியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கான தெளிவான முயற்சி இதுவெனவும் எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான விடயங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.