வார்னர் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது

அவுஸ்திரேலியா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னரின் 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதுடன் அவுஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

பங்களாதேஷ் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும் என்ற நிலையில், இன்றையப் போட்டியில் ஆப்கான் அணி பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில், செயின்ட் லூசியாவில் நேற்று இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியே டேவிட் வார்னரின் இறுதிப் போட்டியாக மாறியது.

வார்னரின் ஓய்வு ஒவ்வொரு வடிவத்திலும் படிப்படியாக அமைந்திருந்தது, கடந்த ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி அவரது கடைசி போட்டியாக இருந்தது.

அதேபோல் கடந்த ஜனவரியில் பாகிஸ்தானுக்கு எதிரான அவரது கடைசி டெஸ்டிலும் விளையாடினார், மேலும் இந்த T20 உலகக் கிண்ணம் தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று அவர் முன்னர் கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டி அவரின் இறுதி ஆட்டமாக இருக்கும் என வார்னர் நினைத்திருக்க மாட்டார். அந்தப் போட்டியில் ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இது அவரது கடைசி ஆட்டம் என்று தெரியாமல், மரியாதை அல்லது கைதட்டல் இல்லாமல் தன் தலையை குனிந்தபடி டேவிட் வார்னர் ஆடுகளத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், டேவிட் வார்னர் குறித்து அணியின் சக வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவசியம் ஏற்பட்டால் சாம்பியன் ட்ராபியில் விளையாடுவேன் என டேவிட் வார்னர் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

37 வயதான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் கிட்டத்தட்ட 19000 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.

Recommended For You

About the Author: admin