பெப்ரவரி 22ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் சுமார் 241 கோடி வசூல் சாதனை செய்தது.
மலையாளத்தில் உருவாகிய இத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்துக்கு தான் 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் படத்தின்மூலம் வரும் இலாபத்தில் தனக்கு 40 சதவீத பங்கை தருவதாகவும் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுவரையில் தனக்கு எதுவித இலாபமும் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டதோடு, குறித்த தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதில், ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனைய இரு தயாரிப்பாளர்களுக்கும் விசாரணைக்கு வருவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திலிருந்து கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.