அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்து ஆலயம் ஒன்றினை இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு ஆதரவாளர்கள் தேசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள சுவாமிநாராயண் கோவிலின் வெளிப்புறச் சுவர்கள் ‘இந்து எதிர்ப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரானவர்களால்’ சிதைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூக ஊடகங்களில் பரவும் படங்களின்படி, கோவிலுக்கு வெளியே உள்ள ஒரு வழிகாட்டி பலகையில் ‘கலிஸ்தான்’ என்ற வார்த்தை மற்ற ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளுடன் எழுதப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
“கோயிலுக்கு அருகில் வசிக்கும் ஒருவர், கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் கருப்பு மையில் இந்து மற்றும் இந்திய எதிர்ப்பு வாசகங்களைக் கண்டறிந்துள்ளதுடன், உடனடியாக உள்ளூர் நிர்வாகத்திற்கு அவர் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது ஒரு ‘இலக்கு வைக்கப்பட்ட சம்பவம்’ எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நெவார்க் நகரின் தலைமை பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தீவிரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
“தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் அதுபோன்ற சக்திகளுக்கு (இந்தியாவுக்கு எதிராக) வெளிநாடுகளில் இடம் கொடுக்கக்கூடாது.
இந்த சம்பவம் தொடர்பில் தூதரக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.