மன்னார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

மன்னார்- முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு குடும்பஸ்தர்களின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (24.08.2023) இடம்பெற்ற நிலையில், சடலங்கள் இன்று (26.08.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஜேசுதாசன் அருந்தவராஜா என்ற 3 பிள்ளைகளின் தந்தை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த 56 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை கணபதி காளிமுத்து ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரட்டைக்கொலை சம்பவம்
குறித்த இருவரும் 24.08.2023 அன்று காலை மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்றபோது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor