உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தி அனுப்பிய இலங்கை!

இலங்கையிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில், இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருந்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு

இலங்கைக்கு பொருட்கள் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்க வேண்டும்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளிற்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்க வேண்டும்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சருக்கும் தெரிவித்து வந்துள்ளோம். தாங்க முடியாத அளவிற்கு மருந்துப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

மருந்து கொள்வனவில் முறைகேடுகள்

மருந்துகளை கொள்வனவு செய்வதில் பல முறைகேடுகள் ஊழல்கள் இடம்பெறுகின்றன. அதிகாரிகளிடம் இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

நோயாளிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு உரிய அதிகாரிகளிற்கு தெரிவிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது. இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor