தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் தமிழரசு பெயர் திட்டமிட்டு மறைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய் கிராமசபையின் முன்னாள் தலைவருமான அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலி.தெற்கு பிரதேசசபையின் முன்றிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது.

அந்த நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை இது திட்டமிட்ட உருமறைப்பு என் நேற்று பிற்பகல் 4 மணிக்கு அன்னாரின் சிலைக்கு அஞ்சலி செலுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர்முன்னணியின் உறுப்பினர்கள் மேற்படி விடயம் தொடர்பில் தமது வருத்தத்தைத் தெரிவித்தனர்.

நேற்று காலை இடம்பெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா பங்குபற்றியிருந்தார். அவர்கூட இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமரர் தர்மலிங்கத்தைப் படுகொலை செய்தவர்களுடன்
இன்று அவரது மகன் கூட்டுச் சேர்ந்தமை வேதனையே!
வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கஜவர் கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது.

– இவ்வாறு தெரிவித்தார் வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ்.

தர்மலிங்கத்தின் நினைவுத் தூhபிக்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

இவங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் அமரர் தர்மலிங்கமும் ஒருவர். அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியுற்றமை கிடையாது. இதனால்தான் அவரை மக்கள் முடிசூடா மன்னர் என்று அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார்.

அவரது மகன் ஆயுதக்குழு உறுப்பினராக இருந்து பின் ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்டபோது தந்தையின் பெயரையும் தமிழரசுக் கட்சியின் பெயரையும் பயன்படுத்தித்தான் மக்கள் மனங்களை வென்றார். இன்று தர்மத்தையே கற்றுத் தந்த தர்மரின் சிலையில் அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. அதனைத் தமிழரசின் வாலிபர் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று (நேற்று) காலை தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா நிகழ்வில் அவரை யார் கொலை செய்தார்களோ அந்த ஆயுதக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். இன்று தனது தந்தையைக் கொன்ற கஜவர்களுடன் அவரது மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகிறது. – என்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் கருத்துத் தெரிவிக்கையில் –

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பது நிச்சயம். தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்ததும் இந்தச் சிலையில் கட்சியின் பெயரைப் பொறிக்கவேண்டும். – என்றார்.

Recommended For You

About the Author: webeditor