தனுஷ்க குணதிலக்க தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட்டை அல்லது தனுஷ்க குணதிலக்கவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அல்லது அறிக்கையை வெளியிடுவதற்கு, இலங்கையில் எந்தவொரு சட்டத்தரணியையும், தாம் அங்கீகரிக்கவோ அல்லது தக்கவைக்கவோ இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் சட்டத்தரணி ஒருவர், தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியிட்ட அறிக்கைகள், குறித்த சட்டத்தரணி இலங்கை கிரிக்கெட் சார்பாக கருத்து தெரிவிக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த சட்டத்தரணியின் அத்தகைய அறிக்கைகள் அல்லது அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இலங்கை கிரிக்கெட் எவ்வித பொறுப்பையும் கொண்டிருக்காது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor