மன்னார் புனித சவேரியார் கல்லூரிக்கு அகில இலங்கை ரீதியில் 2-ம் இடம்!
தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, மன்னார் மண்ணிற்குப் பெருமை சேர்த்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வீரர்களுக்கு இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், பலமான கொழும்பு ஹமீட் அல் ஹுசேனியா அணியுடன் மோதிய புனித சவேரியார் கல்லூரி அணி, கடும் போராட்டத்திற்குப் பிறகு 1-0 என்ற கோல் கணக்கில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இன்று காலை 8:30 மணியளவில் மன்னார் பேருந்து நிலையப் பகுதியில் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சாதனை படைத்த வீரர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அவர்கள் திறந்த வாகனத்தில் ஊர்வலமாகப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மன்னார் நகர பிரதேச செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் புனித சவேரியார் கல்லூரி வீரர்கள் மன்னார் மாவட்டத்திற்கும், வட மாகாணத்திற்கும் அகில இலங்கை ரீதியில் ஒரு கௌரவத்தைத் தேடித்தந்துள்ளனர்.
20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இவர்களின் இந்தச் சாதனை எதிர்கால வீரர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.


