கொடிகாமத்தை உலுக்கிய கொலை வழக்கு; இருவருக்கு மரண தண்டனை விதிப்பு..!
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று (20) தீர்ப்பளித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி, மந்தைவெளிப் பகுதியில் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் எதிரிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா முன்னிலையானார். வழக்குத் தொடுநர் தரப்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி கா. நசிகேதன் முன்னிலையாகி வழக்கை நெறிப்படுத்தினார்.
சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை விரிவாக ஆராய்ந்த நீதிபதி, எதிரிகள் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநர் தரப்பு நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மந்தைவெளி பிரதேசத்தைச் சேர்ந்த எதிரிகள் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த நீதிபதி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

