கண்கவர் கப்பலான கோர்டீலியா குரூஸ், எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளது.
இந்தியாவில் இருந்து இயங்கும் இந்தக் கப்பல், காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் காலை வேளையில் நங்கூரமிடவுள்ளது. பயணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டை உட்பட யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர், அவர்கள் இந்தியா திரும்புவார்கள்.
2023ஆம் ஆண்டு ஒன்பது முறையும், 2024ஆம் ஆண்டில் இதுவரை ஆறு முறையும் இலங்கைக்கு வந்துள்ள இந்தக் கப்பலின் இந்த ஆகஸ்ட் பயணங்கள், ஆண்டின் முக்கிய பயணங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
கோர்டீலியா குரூஸ், அதன் ஆடம்பரமான மற்றும் அதிநவீன வசதிகளுக்குப் பெயர் பெற்றதுடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணங்களை வழங்கும் மிகவும் பிரபலமான சொகுசுப் பயணக் கப்பல் சேவைகளில் ஒன்றாகும்.

