வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் சில வரம்புகளை நீக்க ஒப்புதல்

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாவை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சில நிபந்தனைகளின் கீழ் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையில் வசிப்பவர்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பணத்தை அனுப்புவதற்கான அனுமதியை இலங்கையின் மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.

“இலங்கையின் கையிருப்பு படிப்படியாக மேம்பட்டுள்ளது மற்றும் மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் வரம்புகள் அதிகரிக்கப்படும்” என்று பந்துல குணவர்தன வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு, பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான நிதி நெருக்கடியிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இவற்றுள் சுமார் $1.5 பில்லியன் கையிருப்பு சீன யுவானின் குறிப்பிடப்பட்ட இடமாற்று ஆகும்.

வாகன இறக்குமதிக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடு

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என தாம் நம்புவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மிகவும் திட்டமிட்டு, நுணுக்கமாகத் தளர்த்தப்படுகின்றன.

கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளன.

அதன் அடிப்படையில் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கஞ்சாவுக்கு அமைச்சர் மறுப்பு

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவது தொடர்பாக அமைச்சரவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார்.

அவ்வாறான எந்தவொரு யோசனையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விடுத்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சாவை பயிரிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல என்பதனால் இந்தக் கருத்துக்கு அவர் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin