பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மங்கள்! கொலை தொடர்பில் வெளியாகியுள்ள சில முக்கிய ஆதாரங்கள்

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பாக நடத்தப்பட்ட மாஜிஸ்திரேட் விசாரணையின் போது கூட, அத்தகைய கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிசம்பர் 15 அன்று ஷாப்டரின் மரணம் தொடர்பாக, டி.என்.ஏ. சோதனை மற்றும் மாதிரிகள் பெறப்படாத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லாத சூழ்நிலையில் இதுபோன்ற கருத்து உருவாகியுள்ளதாக சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம்
மேலும், ஷாப்டரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள், அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது நெருங்கிய அதிகாரி, பொரளை மயானத்தின் ஊழியர்கள், ஷாப்டரின் வர்த்தக நிறுவனங்களுக்கு நெருக்கமானவர்கள் உட்பட சுமார் 145 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் பொரளை மயானத்திற்குச் சென்று தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், அறிக்கைகள் மற்றும் அறிவியல் முடிவுகளின் அடிப்படையில் அவரது மரணம் குறித்து ஒரு குறிப்பிட்ட முடிவை எட்ட முடியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, உட்கார்ந்திருக்கும்போது கழுத்தை நெரித்தால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை கொலைகள் எனவும், ஒருவர் கயிற்றில் தொங்காமல் அமர்ந்திருக்கும் போது கழுத்தை நெரித்து மரணங்கள் ஏற்பட்டதை பிரேத பரிசோதனை செய்த அனுபவங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் கிட்டத்தட்ட கொலைகள் என்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சன்ன பெரேரா கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor