இறம்பொடை மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு..!
சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார்.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் குறித்த உடல் பாகம் மீட்கப்பட்டுள்ளது.
இது மேலதிக விசாரணைகளுக்காகவும் அடையாளங்காண்பதற்காகவும் மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கிய 27 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி என்பனவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

